காலச்சுவடுகள்

ஆலயங்கள்


முற்காலத்தில் சைவம்,வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.

ஏகாம்பரநாதசுவாமி கோவில்


ஏகாம்பரநாதீஸ்வரர் ஆலயம்
தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்கல்வெட்டுக்கள்
வடக்கு புறத்தில் உள்ள ஒரு கல்வெட்டு

கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.



வடக்குப்புற சுவரின் மற்றொரு கல்வெட்டு
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும் உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள்

தெற்குப்புற சுவர் கல்வெட்டின் ஒரு பகுதி
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள் விளக்குகின்றது.
தெற்குப் பகுதி கல்வெட்டில் மற்றொன்று
கி.பி.1205 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவில் திருப்பணியை அக்கோவில் மகேஸ்வரரும், கண்காணி ஆண்டாரும், தேவகன்மிகளும், கணக்கரும் செய்து முடித்தனர். (இன்றும் இவை அனைத்தையும் நாட்டார், மூப்பர், கவுண்டர், 24-கரைகாரர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு தெடாவூரில் நடக்கும் அனைத்து வகை விழாக்களையும் முன்னின்று நடத்தும் மக்கள் அமைப்பாக விளங்கி வருகிறது). இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால் கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில் ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும், புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்காலக் கட்டத்தில் இருந்த அரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்

ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது.


அதற்கான கல்வெட்டு
 
ஆதாரங்கள்
1.சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

2. தமிழ் விக்கிபீடியா தளத்தில் சென்றும் இதை பார்க்கலாம். கீழே இணைப்பு தரப்பட்டுள்ளது.. அதில் உள்ள தேடுபொறியில் தெடாவூர் என  தட்டச்சு செய்து பார்க்கவும்.. 

http://ta.wikipedia.org/